திருவாரூரில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்


திருவாரூரில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 9:08 PM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று திருவாரூரில் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருவாரூர்,

ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி திருவாரூரில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சிவராமன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மணிகண்ணன் வரவேற்றார்.

நீதி விசாரணை

இதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், அவருடைய மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் தம்பிக்கோட்டை கணபதி, நன்னிலம் பிரகாஷ், மன்னார்குடி லெட்சுமணன், திருத்துறைப்பூண்டி முனியப்பன், மகாமுத்துக்குமார், வக்கீல்கள் தனசேகரன், பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்னார்குடி ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story