லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாது தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் பேட்டி


லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாது தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 1 April 2017 11:30 PM GMT (Updated: 1 April 2017 3:34 PM GMT)

லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக வருகிற 3–ந் தேதி முதல் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாது

சேலம்,

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வை திரும்பபெற வேண்டும், பழைய லாரிகளுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30–ந் தேதி முதல் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

தமிழகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்களுடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சண்முகப்பா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், சம்மேளன தலைவர் கோபால் நாயுடு, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் குமாரசாமி, செயலாளர் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பேட்டி

முடிவில், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 30–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.200–ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தியுள்ளனர். இதுபற்றி அந்தந்த மாநில அரசுகள் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அதன்படி, கர்நாடகாவில் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் லாரிகளுக்கு உண்டான இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்கவில்லை. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பேசினோம். ஆனால் அதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், லாரி உரிமையாளர்களின் இதர கோரிக்கைகள் பற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினோம்.

ரூ.25 ஆயிரம் சரக்குகள் தேக்கம்

அப்போது, 15 ஆண்டுகளுக்கு மேல் ஓடும் பழைய லாரிகளை திரும்ப பெறக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக எங்களிடம் அவர் உறுதியளித்தார். தமிழகத்தில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்துதலில் ஊழல் அதிகமாக நடக்கிறது. இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும். மேலும், போராட்டத்தை தீவிரப்படுத்த கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்திடம் ஆதரவு கேட்டுள்ளோம். அவர்களும் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தென் மாநிலங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக தற்போது கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் வருகிற 3–ந் தேதி (அதாவது நாளை) முதல் சுமார் 4 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாது. லாரிகள் வேலை நிறுத்தம் மேலும் தீவிரமடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டேங்கர் லாரி உரிமையாளர்கள்

இதுகுறித்து தென்னிந்திய எல்.பி.ஜி.கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் நிருபர்களிடம் கூறுகையில், தென்னிந்திய லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய 6 மாநிலங்களில் வருகிற 3–ந் தேதி முதல் சுமார் 4 ஆயிரம் கியாஸ் லாரிகள் ஓடாது, என்றார்.


Next Story