56 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது விற்பனை ஒரே நாளில் ரூ.80 லட்சம் குறைந்தது


56 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது விற்பனை ஒரே நாளில் ரூ.80 லட்சம் குறைந்தது
x
தினத்தந்தி 2 April 2017 10:45 PM GMT (Updated: 2 April 2017 8:50 PM GMT)

குமரி மாவட்டத்தில் 56 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது விற்பனை ஒரே நாளில் ரூ.80 லட்சம் குறைந்ததாக அதிகாரி தெரிவித்தார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருந்த டாஸ்மாக் கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அடைக்கப்பட்டன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 56 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதுபோல ஓட்டல்கள், கிளப்புகளில் செயல்பட்டு வந்த 9 பார்களும் அடைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் கோணத்தில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகளை வேறு இடத்தில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ரூ.80 லட்சம் குறைந்தது

குமரி மாவட்டத்தில் மொத்தம் 136 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் 56 கடைகள் மூடப்பட்டதால், நேற்று முன்தினம் மதுவிற்பனை ஒரே நாளில் ரூ.80 லட்சம் குறைந்திருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் இருந்த 136 டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2½ கோடிக்கு மது விற்பனை நடைபெறும். தற்போது 56 கடைகள் மூடப்பட்டுள்ளதால் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மதுவிற்பனை ஒரே நாளில் சுமார் ரூ.80 லட்சம் குறைந்துள்ளது‘ என்றார்.


Next Story