கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் சாவு மணி அடித்து ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் சாவு மணி அடித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 6 April 2017 8:51 PM GMT)

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் சாவு மணி அடித்தும், சங்கு ஊதியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சங்கு ஊதியும், சாவு மணி அடித்தும் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜீவானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட துணை செயலாளர் ஜெஸ்டின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோதண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன கோஷங்கள்

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் அருள்டேனியல் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் திரளான நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் கலந்துகொண்டு சாலை பராமரிப்பு பணிகளை தனியார் வசம் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவை கைவிட்டு விட்டு பராமரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், தற்காலிக ஊதிய முறையில் வழங்கப்படுவதை மாற்றி நிரந்தர ஊதிய முறையை பின்பற்றி ஊதியம் வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story