கழுத்தை அறுத்து பெண் படுகொலை கணவரிடம் போலீசார் விசாரணை


கழுத்தை அறுத்து பெண் படுகொலை கணவரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 April 2017 9:05 PM GMT (Updated: 6 April 2017 9:05 PM GMT)

புதுவை தேங்காய்திட்டு துறைமுக சாலையில் ஒரு பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகம் செல்லும் சாலையில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது முட்புதர்களுக்கு இடையே உடல் அழுகிய நிலையில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த ஆடைகள் களைந்தும், உடலில் பல இடங்களில் காயங்களும் காணப்பட்டன.

அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

தொழிலாளி மனைவி

அப்போது முதலியார்பேட்டை உடையார்த்தோட்டம் எல்லை முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தட்டு வண்டி தொழிலாளியான வேல் என்பவரின் மனைவி வள்ளி (வயது46) கடந்த 3-ந்தேதி முதல் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. எனவே பிணமாக கிடந்தவர் வள்ளியாக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்காக உறவினர்களை அழைத்து அடையாளம் காணப்பட்டதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் வள்ளி தான் என்பது உறுதி யானது. துறைமுகம் சாலைக்கு வள்ளி எதற்காக சென்றார்? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் வள்ளியின் கணவரான வேலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story