மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடு: அரசரடி குடிநீரேற்று நிலையம் மூடப்பட்டது
![மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடு: அரசரடி குடிநீரேற்று நிலையம் மூடப்பட்டது மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடு: அரசரடி குடிநீரேற்று நிலையம் மூடப்பட்டது](https://img.dailythanthi.com/Images/Article/201705040018466965_Water-scarcity-in-Madurai--The-drinking-station-closed_SECVPF.gif)
மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அரசரடி குடிநீரேற்று நிலையம் மூடப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை அரசரடியில் மாநகராட்சியின் குடிநீரேற்று நிலையம் உள்ளது. இங்கு வைகை அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் வரும் குடிநீர், இங்குள்ள 3 மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்படும். இதன் மொத்த கொள்ளளவு 15 லட்சம் லிட்டர் ஆகும். இங்கிருந்து குழாய் மூலமும், லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, தினமும் 3 முறை என மொத்தம் 45 லட்சம் லிட்டர் குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த நீரேற்று நிலையம் நேற்று திடீரென்று மூடப்பட்டது.
தற்காலிக ஏற்பாடுஇது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அரசரடி நீரேற்று மேல்நிலைத் தொட்டியில் முழு அளவு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. எனவே லாரிகளுக்கு தண்ணீர் வழங்க வில்லை. இதன்காரணமாக அரசரடி நீரேற்று நிலையம் மூடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஏற்கனவே போடப்பட்ட போர்வெல்களில் இருந்து லாரிகளுக்கு தண்ணீர் வழங்கப்படும். அந்த தண்ணீர் மாநகர மக்களுக்கு வழங்கப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது தற்காலிக ஏற்பாடு தான். தண்ணீர் சரியாக வரும்பட்சத்தில் அரசரடி நீரேற்று நிலையம் மீண்டும் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.