பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமுத்தையா மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமுத்தையா மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 10:15 PM GMT (Updated: 3 May 2017 7:55 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ததை மீண்டும் பெற்றுத்தர வேண்டும், மேலும் அந்த இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்குதல், சுகாதார துறைக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்தல், கிராப்புற மருத்துவ சேவை தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுத்தல், அரசு டாக்டர்களின் உரிமைகளை பறிக்க கூடாது, கிராமங்களில் அரசு டாக்டர்கள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் அவர்களது சட்டை பையில் கருப்பு பட்டை அணிந்து, நேற்று ஒருமணி நேரம் பணியை புறக்கணித்து, அங்குள்ள நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு முதல் 9 மணி வரைக்கும் நடந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட டாக்டர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் டாக்டர்கள் பாலாஜி, ஜேம்ஸ், ரஞ்சித், அமுதா, சரவணகுமார் உள்ளிட்ட பல்வேறு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

ஒருமணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். மேலும் நாளை(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story