தூக்குபோட்டு பெண் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


தூக்குபோட்டு பெண் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 3 May 2017 10:15 PM GMT (Updated: 3 May 2017 9:08 PM GMT)

திருச்சியில் தூக்குபோட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

திருச்சி,

திருச்சி புத்தூர்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி அமுதா(வயது 40). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜ்குமார் பெங்களூரில் வேலை பார்த்து வருவதால் அவ்வப்போது வந்து மனைவியை பார்த்து விட்டு செல்வார். குழந்தை, பாட்டி வீட்டில் உள்ளதால் அமுதா வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் முழுவதும் அமுதா வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் நேற்று காலை அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அரசு மருத்துவமனை போலீசார் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அமுதா மின்விசிறியில் தூக்குபோட்டு பிணமாக தொங்கினார்.

உருக்கமான கடிதம் சிக்கியது

வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அவர் படுக்கையில் எழுதி வைத்து இருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், “தனிமை என்னை வாட்டி வதைக்கிறது. அதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் சாகிறேன். என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதப்பட்டு இருந்தது. போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி அமுதாதான் அந்த கடிதத்தை எழுதினாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அமுதாவின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story