அவினாசி அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
![அவினாசி அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அவினாசி அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்](https://img.dailythanthi.com/Images/Article/201709210236577663_Asking-for-drinking-waterCivilians-besieged-by-the_SECVPF.gif)
அவினாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி,
அவினாசி ஒன்றியம் தத்தனூர் ஊராட்சி சந்தைமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் முறையாக வழங்க வேண்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ‘‘தத்தனூர் ஊராட்சி சந்தைமேடு சாவக்கட்டுப்பாளையம், தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் மாதம் ஒரு முறைதான் குடிநீர் கிடைக்கிறது. எனவே குடிநீருக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி செயலாளர் மகாலிங்கத்திடம் பல முறை தெரிவித்தும் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தடையின்றி குடிநீர் கிடைக்க முற்றுகை போராட்டம் நடத்தினோம்’’ கூறினார்கள்.
முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், துணை வட்டார வளர்ச்சி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதனையடுத்து புதிய குடிநீர் பைப் லைன் அமைத்து அனைவருக்கும் முறையாக குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.