500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள மனைப்பிரிவை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும்


500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள மனைப்பிரிவை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 29 Nov 2017 8:30 PM GMT (Updated: 29 Nov 2017 2:25 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 500 சதுர மீட்டர் பரப்புக்கு மேல் உள்ள மனைப்பிரிவை கட்டிடம், மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 500 சதுர மீட்டர் பரப்புக்கு மேல் உள்ள மனைப்பிரிவை கட்டிடம், மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஒழுங்குமுறை குழுமம்

மத்திய அரசு கட்டிடம், மனை விற்பனை முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் சட்டம் 2016 அறிவித்து உள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு சட்ட விதிகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி எந்த ஒரு கட்டிட உரிமையாளரும், எந்த ஒரு கட்டிடத்தையோ அல்லது மனைப்பிரிவையோ(500 சதுர மீட்டர் பரப்புக்கு மேல் அல்லது 8 குடியிருப்புகளுக்கு மேல்) தமிழ்நாடு கட்டிடம், மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யாமல் விளம்பரம் கொடுப்பதோ, சந்தைப்படுத்துவதோ, வீட்டை பதிவு செய்வதோ, விற்கவோ அல்லது விற்க முயற்சி செய்வதோ, எந்த முறையிலும் வீட்டையோ அல்லது மனையையோ முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ வாங்குமாறு அறிவுறுத்தக் கூடாது. கட்டிட உரிமையாளர், மேம்பாட்டாளர் எந்த ஒரு விளம்பரம் கொடுப்பதாக இருந்தாலும், தமிழக கட்டிட மனை மற்றும் விற்பனை முறைப்படுத்துதலும், மேம்படுத்தலும் விதிகளின்படி பெறப்பட்ட பதிவு எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

சிறை தண்டனை

இந்த விதிகள் நடைமுறைக்கு வந்த 22–6–17–க்கு முன் முடிவடைந்த திட்டங்களுக்கு பணி நிறைவு சான்று விவரம் அல்லது பதிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி உரிய திட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்த விவரங்களை குறிப்பிட வேண்டும். இதனை வீடு, மனை கடன் வழங்கும் நிதி நிறுவனங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். இடைத்தரகராக செயல்படும் ரியல் எஸ்டேட் முகவர்களும் இந்த குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய தவறினால் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் சிறை தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story