காஞ்சீபுரம் அருகே தீக்குளித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு
![காஞ்சீபுரம் அருகே தீக்குளித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு காஞ்சீபுரம் அருகே தீக்குளித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு](https://img.dailythanthi.com/Images/Article/201711300141445759_The-school-student-was-killed-without-any-treatment_SECVPF.gif)
காஞ்சீபுரம் அருகே தீக்குளித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடியகரம் புதிய காலனி பகுதியில் வசிப்பவர் கன்னியப்பன். மின்வாரிய ஊழியர். இவரது மகன் காமேஷ் (13). இவன் அருகில் உள்ள படுநெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான். காமேஷ் சரியாக படிக்காததால் அவனது பெற்றோர் ஏன் சரியாக படிக்கவில்லை என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த காமேஷ் வீட்டு மாடிக்கு சென்று அங்கிருந்த மண்எண்ணெய்யை தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டான்.
காமேஷின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி சென்று தீயை அணைத்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மாணவனை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் காமேஷ் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.