தடையை மீறி தென்னை மரங்களை அதிகாரிகள் வெட்டிய காட்சி: திண்டுக்கல் கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


தடையை மீறி தென்னை மரங்களை அதிகாரிகள் வெட்டிய காட்சி: திண்டுக்கல் கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Feb 2018 10:45 PM GMT (Updated: 2 Feb 2018 6:14 PM GMT)

தடையை மீறி தென்னை மரங்களை அதிகாரிகள் வெட்டியதை வீடியோவில் பதிவு செய்து நீதிபதிகளுக்கு விவசாயி அனுப்பினார். இதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திண்டுக்கல் நீலமலைக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-

நீலமலைக்கோட்டையில் எனக்கு சொந்தமாக 4.12 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் அருகே செல்லும் கால்வாய் கரையில் 15 முதல் 20 வயது உடைய 50 தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களால் கால்வாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக இருந்தால் சட்டப்படி முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவ்வாறு எந்த நோட்டீசும் அனுப்பாமல் மரங்களை அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது நிலத்தில் உள்ள தென்னை உள்ளிட்ட மரங்களை அகற்றக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் “வளர்ந்த மரங்களை வெட்டக்கூடாது. எனவே தென்னை மரங்களை வெட்ட தடை விதிக்கப்படுகிறது“ என்று உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதி வருவாய்த்துறையினர் தென்னை மரங்களை வெட்டினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனுதாரர், மரங்களை வெட்ட ஐகோர்ட்டு தடை விதித்தும், இந்த நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டதை வீடியோவில் பதிவு செய்து தனது வக்கீலுக்கு அனுப்பினார்.

அந்த வீடியோவை நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோரிடம் வக்கீல் சமர்ப்பித்து சம்பவம் குறித்து முறையிட்டார். வீடியோவை பார்வையிட்ட நீதிபதிகள், உடனடியாக திண்டுக்கல் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்குமாறு அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டனர்.

அதன்பேரில் தென்னை மரங்கள் வெட்டுவது நிறுத்தப்பட்டதாக நீதிபதிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், “தென்னையை தென்னம்பிள்ளை என்று தான் அழைக்கிறோம். ஒரு மரத்தை வளர்ப்பது கடினம். எனவே வளர்ந்த மரங்களை வெட்டக்கூடாது. தென்னை மரங்களை வெட்ட கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டும், அந்த உத்தரவு நகல் கிடைக்காதநிலையில் எப்படி நடவடிக்கை எடுக்கலாம். எனவே இது குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட தாசில்தார் ஆகியோர் வருகிற 7-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story