மதுரையில் பா.ஜ.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை


மதுரையில் பா.ஜ.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Feb 2018 11:15 PM GMT (Updated: 2 Feb 2018 7:14 PM GMT)

கடன்சுமை அதிகரித்ததால், மதுரை பா.ஜ.க. பிரமுகர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை,

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகன் முரளி(வயது 48), பாரதீய ஜனதா கட்சியின் கீரைத்துரை பகுதி தலைவர்.

இவர் 2011-ம் ஆண்டு மென்பொருள் நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார். அப்போது நிறுவனத்தை பல்வேறு ஊர்களில் விரிவுபடுத்த சிலரை பங்குதாரர்களாக சேர்த்தார். அந்த நேரத்தில் முரளியின் மனைவி நெஞ்சு வலியால் திடீரென்று இறந்து விட்டார்.

அப்போது இருந்து மென்பொருள் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியது. அதனை சரி செய்ய முரளி பலரிடம் கடன் வாங்கினார். அப்படியும் நஷ்டத்தில் இருந்து அவரல் மீளமுடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களும் சம்பள பாக்கி காரணமாக வேலையை விட்டு விலகிச் சென்றனர்.

எனவே தொழிலை சரி செய்ய தனியார் வங்கியில் பல லட்ச ரூபாய் கடன் வாங்கினார். அந்த கடனையும் சரியாக கட்ட முடியவில்லை. எனவே வங்கி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியதுடன், சமீபத்தில் கடனைத்திருப்பிச்செலுத்தாதவர்கள் பட்டியலில் முரளி பெயரையும் இணைத்து பத்திரிகையில் படத்துடன் விளம்பரம் வெளியிட்டது.

இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

இது தவிர சில நாட்களுக்கு முன்பு மென்பொருள் நிறுவனத்தில் பங்குதாரர்கள் இடையேயும் பிரச்சினையும் ஏற்பட்டது. கடன்தொல்லை, மனைவி இறந்த சோகம், பங்குதாரர்கள் இடையே தொழிலில் பிரச்சினை ஆகிய காரணத்தினால் அவர் யாரிடமும் சரியாக பேசவில்லை.

சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற அவர் காணாமல் போய் விட்டார். இதுபற்றி அவருடைய அண்ணன் சிவக்குமார் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், முரளி குடியிருந்த வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. எனவே அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, முரளி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவரது உடல் அழுகிப் போய் இருந்தது.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறும் போது, முரளி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பதையும், அவரது இறப்பிற்கு காரணமானவர்கள் யார் என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

Next Story