75 ஆண்டுகள் பழமையான பள்ளியை விற்பனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு


75 ஆண்டுகள் பழமையான பள்ளியை விற்பனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 May 2018 10:30 PM GMT (Updated: 13 May 2018 6:57 PM GMT)

சீர்காழியில் 75 ஆண்டுகள் பழமையான பள்ளியை விற்பனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளி முன் வீடு விற்பனைக்கு என போர்டு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி கீழவீதியில் கடந்த 75 ஆண்டுகளாக அம்பிகை விலாஸ் என்ற அரசு உதவிபெறும் சபாநாயக முதலியார் இந்து தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியரும், 3 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு வரை இந்த பள்ளியில் சுமார் 75 மாணவர்கள் படித்தனர். இந்த பள்ளி நிர்வாகத்தினர் தற்போது பள்ளியை மூடி விற்பனை செய்ய முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பள்ளி முன் வீடு விற்பனைக்கு என போர்டு வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் நேற்று தொடக்கப்பள்ளி முன்பு திரண்டு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது சீர்காழி நகரில் பழமையான அம்பிகைவிலாஸ் என்ற பெயரில் இயங்கி வரும் சபாநாயக முதலியார் இந்து தொடக்கப்பள்ளியை விற்பனை செய்யக்கூடாது, மாணவர்களின் நலன் கருதி பள்ளியை அதே இடத்தில் தொடர்ந்து இயக்க வேண்டும்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என கூறி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர் நடராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் பந்தல்முத்து, குமார், உத்திராபொன்னழகன், குருசாமி, பரணிதரன், பந்தல்சரவணன், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு இயக்கம் மாநில பொது செயலாளர் சுரேஷ், செயலாளர் ஜெயவேல், நகர தலைவர் கனிவண்ணன், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

Next Story