உணவு பொருட்களை ஆய்வு செய்ய 6 பேர் அடங்கிய குழு அமைப்பு அதிகாரிகள் தகவல்


உணவு பொருட்களை ஆய்வு செய்ய 6 பேர் அடங்கிய குழு அமைப்பு அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 13 May 2018 10:15 PM GMT (Updated: 13 May 2018 7:57 PM GMT)

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவையொட்டி அங்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை ஆய்வு செய்ய 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

குடியாத்தம் நகரத்தின் புகழ்பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இவ்விழாவை காண வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருவிழாவில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள வசதியாக மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கெங்கையம்மன் திருவிழாவையொட்டி கோவில் அருகே பல்வேறு விதமான உணவுப்பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு விற்பனை செய்யும் உணவு பொருட்கள் தரமானதாகவும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்துள்ளனர். அக்குழுவை சேர்ந்தவர்கள் நாளையும், நாளை மறுதினமும் கடைகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப்பொருட்கள், தின்பண்டங்கள் சுத்தமாக, சுகாதாரமாக விற்பனை செய்யப்பட வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடும் பக்தர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் உணவுப்பொருட்களை ஆய்வு செய்ய 6 பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர் அனைத்து கடைகளில் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது தரமற்ற உணவுப்பொருட்கள், தின்பண்டங்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Next Story