கேரளாவுக்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்எண்ணெய், 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்எண்ணெய், 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 20 May 2018 11:00 PM GMT (Updated: 20 May 2018 9:46 PM GMT)

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்எண்ணெய், 700 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கருங்கல்,

குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வினியோகம் செய்யப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி, கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு நித்திரவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மினி டெம்போ ஒன்று வேகமாக வந்தது. அதிகாரிகள் அதை சைகை காட்டி நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது.

இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதை பின்தொடர்ந்து துரத்திச்சென்றனர். கிராத்தூர் பகுதியில் சென்ற போது அதிகாரிகள் மினி டெம்போவை மடக்கி பிடித்தனர். உடனே, வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனையிட்டபோது அதில் பிளாஸ்டிக் கேன்களில் 1000 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து மண்எண்ணெய்யை இனயம் அரசு குடோனிலும், வாகனத்தை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் அழகியமண்டபம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால், அதிகாரிகள் தங்களது ஜீப்பில் காரை துரத்தி சென்று தோலடி என்ற இடத்தில் வைத்து மடக்கி பிடித்தனர்.

உடனே, காரை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனையிட்ட போது அதில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து காருடன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story