நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்


நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:00 PM GMT (Updated: 13 Jun 2018 9:22 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கம்பம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகளுக்கான குறைதீர்க்கும்நாள் கூட்டம் கம்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முகமது அப்துல் நசீர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கிஷோர்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் ‘உழவன் செயலி‘ கையேட்டின் பயன்பாடு குறித்து கூட்டத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பயிர்சேதம் மற்றும் நெல் பயிர் சேதத்துக்கு இழப்பீடு பெறுவது குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

பிரதம மந்திரியின் பயிர்காப்பீடு திட்டத்தில் 2018-ம் ஆண்டுக்கான காரீப் பருவத்தில் வாழை, வெங்காயம், மரவல்லி கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் காப்பீடு செய்வது குறித்து விளக்கினர். தேனி மாவட்டத்தில் தோட்டக் கலை துறையில் 2018-19-ம் ஆண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பேசினர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அதன் விவரம் வருமாறு:-

அப்பாஸ் (ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர்):

விவசாய நிலங்களை பாழ்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மக்னா (ஆணும், பெண்ணும் இல்லாத பாலினம்) என்னும் காட்டுயானையால் தாக்கப்பட்டு 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கேரளா மற்றும் வடமாநிலங்களில், விவசாயத்தைப் பாதிக்கும் யானைக்கூட்டங்களை விரட்ட தேனீக்களை வளர்த்து வருகிறார்கள்.

அதன்படி யானை தொல்லையில் இருந்து விவசாயிகள் தப்பிக்க தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன் காட்சிக்கண்ணன் (திராட்சை விவசாயி):

திராட்சை உற்பத்தி செய்யும் விவசாயிகளால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் உரம், மருந்துகளின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் திராட்சையின் விலை உயரவில்லை. மானிய விலையில் திராட்சை விவசாயிகளுக்கு உரம், மருந்துகளை வழங்க வேண்டும். சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி பகுதிகளில் முல்லைப்பெரியாற்றில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

ராமகிருஷ்ணன் (கம்பம் நீரினைப்பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி):

உலக வங்கி நிதியுதவியுடன் கம்பம் ஒட்டுக்குளம், வீரப்பநாயக்கன் குளம் பகுதியில் நடைபெறுகிற கரையை அகலப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். எந்திர நடவு பணிக்கு தேவையான எந்திரங்களை வழங்க வேண்டும். நெல்லுக்கு போதுமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பனிமலர் (விவசாயி):

எனக்கு கூடலூரில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு தக்கல் முறையில் மின் இணைப்பு கேட்டு ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கு வரைவோலை எடுத்து மின்வாரியத்துக்கு கொடுத்து 10 மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. ஆனால் இதுவரை மின்சார இணைப்பு வழங்கவில்லை. இதனால் விவசாய பணி முடங்கி போய் விட்டது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் சரியாக பதில் சொல்வதில்லை. நான் வரைவோலையாக கொடுத்த பணத்துக்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

சுதா(திராட்சை விவசாயி):

சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான உபகரணங்களை விவசாயிகளே நேரடியாக வாங்க அனுமதிக்க வேண்டும். அதற்கான 100 சதவீத மானியத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளின் குறுக்கே கட்டப்படுகிற தடுப்பணைகளை தரமாக அமைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர். இதற்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.

கூட்டத்தில் 18-ம் கால்வாய் சங்க விவசாயிகள் சங்க செயலாளர் திருப்பதி வாசன் கொடுத்த கோரிக்கை மனுவில், தமிழகத்தில் உள்ள பிற அணைகளில் போதுமான பொறியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். ஆனால் முல்லைப்பெரியாறு அணையில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. எனவே அனுபவம் வாய்ந்த செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்களை முல்லைப்பெரியாறு அணைக்கு நியமித்து அணையை பாதுகாத்திட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story