தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரணை


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரணை
x
தினத்தந்தி 7 July 2018 9:30 PM GMT (Updated: 7 July 2018 7:11 PM GMT)

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் விசாரணை நடத்தினார்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், சிப்காட், முத்தையாபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே வழக்குகள் தொடர்பான ஏராளமான ஆவணங்களை சேகரித்து உள்ளனர்.

போலீசாரிடம் விசாரணை

மேலும், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களிடம் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தினர். அன்று ஆஜராகாத சில போலீசாரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

இதற்காக அவர்கள் நேற்று காலையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் விசாரணை நடத்தினர். ஒவ்வொருவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் தெரிவித்த விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. மாலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.


Next Story