உறவினர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


உறவினர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Aug 2018 9:30 PM GMT (Updated: 5 Aug 2018 6:38 PM GMT)

காங்கேயம் அருகே உறவினர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காங்கேயம்,

காங்கேயம் அருகே உள்ள தம்மரெட்டிபாளையம் கிராமம் ரங்கம்பாளையம் பள்ளக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் மலையப்ப கவுண்டர் (வயது 75). இவருடைய மனைவி இறந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். இவருடைய மகன் லோகநாதன் (42). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கும் சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இதனால் மலையப்ப கவுண்டர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று உறவினர்களிடம் மலையப்பகவுண்டர் கூறிவந்துள்ளார். நேற்று காலையில் வழக்கம் போல் தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் சிலரிடம் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறினார்.

இதற்கிடையில் இவருடைய மகன் லோகநாதன், அருகில் உள்ள கடைக்கு உணவு வாங்க சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முற்றத்தில் இருந்த மரத்தில் மலையப்ப கவுண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீசார் விரைந்து சென்று, மலையப்ப கவுண்டர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story