குடிபோதையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்ப மறுத்து கிராம மக்கள் போராட்டம்


குடிபோதையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்ப மறுத்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:30 PM GMT (Updated: 6 Aug 2018 6:44 PM GMT)

குடிபோதையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் ரகு (வயது 21), கட்டுமான தொழிலாளி. இவர் கடந்த 4–ந் தேதி இரவு தனது நண்பர்கள் இருவருடன் குடிபோதையில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனால் ரகுவுக்கும், குமரன் காலனியை சேர்ந்த டிரைவர் கருணாகரனுக்கும் (31) இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ரகு, சரக்கு வாகனத்தின் முகப்பு கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோத்தகிரி போலீசில் கருணாகரன் புகார் அளித்தார். அதன் பேரில் நேற்று முன்தினம் ரகு மற்றும் அவரது தாயாரை அழைத்து விசாரித்த போலீசார் சரக்கு வாகனத்தின் கண்ணாடியை புதிதாக மாற்றிக்கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்து உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு சென்ற ரகு கதவை உள்புறமாக தாளிட்டுள்ளார். வீட்டிற்குள் சென்ற ரகு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுகாரர்கள் அவரது தந்தைக்கு தகவல் அளித்து உள்ளனர். அவரும் கதவை தட்டிப்பார்த்து திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சரக்கு வாகன டிரைவரிடம் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் ரகுவின் கழுத்தில் டிரைவர் தாக்கியதால் காயம் ஏற்பட்டதற்கு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று உள்ளதாகவும் ஆனால் போலீசார் ஒரு தரப்பினரிடம் மட்டும் விசாரணை செய்து சரக்கு வானத்தின் கண்ணாடியை மாற்றிக்கொடுக்குமாறு வலியுறுத்தியதால் தான் ரகு இறந்து விட்டதாக கூறி அவரது உறவினர்களும், கிராம மக்களும் ரகுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து வீட்டிலேயே போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவலறிந்த கோத்தகிரி சப்–இன்ஸ்பெக்டர்கள் நசீர், கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ரகு கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு வந்தபோது குடிபோதையில் இருந்ததாகவும், அவருடன் அவரது தாயாரும் உடனிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட சரக்கு வாகன டிரைவரிடமும் விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தனர். இதில், சமாதானம் அடைந்த கிராம மக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.

அதனைதொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் ரகுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story