காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக வெளியான தகவலால் பரபரப்பு


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக வெளியான தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Aug 2018 11:50 PM GMT (Updated: 17 Aug 2018 11:50 PM GMT)

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக வெளியான தகவலால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம்

பெங்களூரு, 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக வெளியான தகவலால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது..

கருத்து வேறுபாடுகள்

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கடந்த மே மாதம் அமைந்தது. ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்–மந்திரியாக பதவி ஏற்று பணியாற்றி வருகிறார். கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா இருக்கிறார். சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சித்தராமையா கொண்டு வந்த சில திட்டங்களை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மைசூருவில் திரைப்பட நகரம் அமைக்க சித்தராமையா தனது ஆட்சி காலத்தில் அறிவித்தார். அதை ராமநகரில் அமைப்பதாக குமாரசாமி அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து கடிதம் எழுதிய சித்தராமையா, திரைப்பட நகரத்தை மைசூருவிலேயே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காரிலேயே அமர்ந்திருந்தார்

கடந்த 15–ந்தேதி நடந்த சுதந்திர தின விழாவின் போது பெங்களூருவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணாவின் சிலைக்கு சித்தராமையா மாலை அணிவித்தார். சித்தராமையா அங்கு இருந்தபோதே முதல்–மந்திரி குமாரசாமியும் அந்த இடத்திற்கு வந்தார். சித்தராமையா இருப்பதை அறிந்த குமாரசாமி சிறிது நேரம் காரிலேயே அமர்ந்திருந்தார். சித்தராமையா புறப்பட்டு சென்ற பிறகே குமாரசாமி சங்கொள்ளி ராயண்ணாவின் சிலை உள்ள இடத்திற்கு வந்து மாலை அணிவித்தார். அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இந்த நிகழ்வு வெளிப்படுத்தியதாக அரசியல் அரங்கில் பேசிக்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் சித்தராமையா வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார். அவர் வெளிநாட்டில் இருக்கும்போது, மந்திரி பதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரசை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

கவிழ்க்க மாட்டோம்

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, கூட்டணி ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம், அவர்களாலேயே அந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story