முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணிகள் இன்று முடியும் அதிகாரிகள் தகவல்


முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணிகள் இன்று முடியும் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 6 Sep 2018 10:45 PM GMT (Updated: 6 Sep 2018 9:50 PM GMT)

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணிகள் இன்று முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த மாதம் 22-ந் தேதி 9 மதகுகள் உடைந்தன. இதையடுத்து அங்கு தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக வேலை பார்த்து வருகிறார்கள். அணையையொட்டி மணல் மூட்டைகள் அடுக்கி பலப்படுத்தப்பட்டு வருகிறது. மதகுகள் உடைந்த இடத்தில் பாறாங்கற்களை கொட்டி தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பல நாட்கள் நடைபெற்று வந்த இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 95 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும், இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதகுகள் உடைந்த இடத்தில் கொட்டி நிரப்புவதற்காக 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் பாறாங்கற்கள் ஏற்றப்பட்டு அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கொள்ளிடம் அணையில் உள்ள மதகுகளில் 13-வது மதகின் ஒரு பகுதி பாதி உடைந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தது. அந்த மதகின் முழுப்பகுதியும் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாறாங்கற்களை கொட்டி நிரப்பி வருகிறார்கள். இது தவிர ஏற்கனவே அணையையொட்டி 3 அடி உயரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்தன. தற்போது மேலும் 3 அடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை அடுக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

2 நாட்களுக்கு முன்பே மதகுகள் உடைந்த இடத்தில் சீரமைப்பு பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்ணீரின் வேகமும், ஆழமும் அதிகமாக இருந்ததால் பணிகள் முடிவடைய தாமதம் ஏற்பட்டது. ஆனால் தற்போது பணிகள் ஓரளவுக்கு முடிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் இன்றுக்குள் (வெள்ளிக்கிழமை) முடிந்து விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story