பெண்ணை எரித்து கொன்ற தாய் - மகனுக்கு ஆயுள் தண்டனை திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை எரித்து கொன்ற தாய் - மகனுக்கு ஆயுள் தண்டனை திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Oct 2018 10:15 PM GMT (Updated: 11 Oct 2018 5:09 PM GMT)

பெண்ணை எரித்து கொலை செய்த தாய் - மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வேளையம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் பாலு (வயது 37). இவர், மஞ்சுளா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. பாலு மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது பாலுவிற்கு ஆதரவாக அவரது தாய் சரஸ்வதி (65) பேசியுள்ளார். தகராறு முற்றவே பாலுவும், சரஸ்வதியும் சேர்ந்து மஞ்சுளாவை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்து உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலுவையும், சரஸ்வதியையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்து நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார். அதில், மஞ்சுளாவை எரித்து கொலை செய்த பாலுவிற்கும், அவரது தாய் சரஸ்வதிக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகை கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து பாலுவையும், சரஸ்வதியையும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story