நாகர்கோவிலில் பள்ளி மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலி சுகாதாரத்துறையினர் விசாரணை


நாகர்கோவிலில் பள்ளி மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலி சுகாதாரத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 11 Oct 2018 11:15 PM GMT (Updated: 11 Oct 2018 7:38 PM GMT)

நாகர்கோவிலில் விடுதியில் தங்கி படித்த பள்ளி மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலியானார். இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில்,

பேச்சிப்பாறை வேப்பமூட்டுவிளையை சேர்ந்தவர் ஜெயதாஸ் (வயது 44). இவருடைய மகள் அனிட்டா (16). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தாயார் இறந்து விட்டதால் அனிட்டா நாகர்கோவில் சைமன்நகர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் அனிட்டா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். விடுதி காப்பாளர் அவரை பள்ளிக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். ஆனாலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லையாம்.

நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் விடுதி காப்பாளர் அனிட்டாவின் உடல்நிலையை அறிய அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது அவர் பேச்சு, மூச்சு இல்லாத நிலையில் கிடந்ததாக தெரிகிறது. அவரை ஆம்புலன்சில் ஏற்றி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அனிட்டா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவியின் தந்தை ஜெயதாஸ் கொடுத்த புகாரின்பேரில் நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்ம காய்ச்சலால் மாணவி அனிட்டா இறந்த சம்பவம், அவர் படித்த பள்ளி, தங்கியிருந்த விடுதி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் நகராட்சி நகர்நல அதிகாரி கின்சால் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பிரிஜேஷ் தலைமையிலான சுகாதாரத்துறையினர் அனிட்டா தங்கியிருந்த விடுதியை ஆய்வு செய்தனர். அனிட்டாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருந்ததால் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசுப்புழுக்கள் இருக்கிறதா? என்றும் சோதனை செய்தனர்.

பின்னர் நகர்நல அதிகாரி கின்சால் கூறியதாவது:-

மாணவி அனிட்டா தங்கியிருந்த விடுதியில் 86 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அவர்களில் யாருக்கும் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டதா? என்று விசாரித்தோம். யாருக்கும் அப்படி இல்லை. காய்ச்சல் காரணமாக மாணவி அனிட்டா இறக்கவில்லை. ஏனென்றால் 2 நாட்களுக்கு முன்பு அவரது ரத்தத்தை பரிசோதனை செய்தபோது டெங்கு போன்ற காய்ச்சலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே வேறு ஏதாவது நோய் காரணமாக அவள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் அவர் என்ன நோயினால் இறந்திருக்கிறார் என்பது தெரிய வரும் என்றார்.

Next Story