தமிழக- கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: ஆதிவாசி கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டை


தமிழக- கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: ஆதிவாசி கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 11 Oct 2018 9:45 PM GMT (Updated: 11 Oct 2018 7:52 PM GMT)

தமிழக- கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால் ஆதிவாசி கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

குன்னூர், 

தமிழக- கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. இவர்கள் அடிக்கடி வனப்பகுதியில் வசித்து வரும் ஆதிவாசி கிராமங்களில் ஊடுருவி வருகின்றனர். இவர்களை பிடிக்க மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, மானார், மூப்பர்காடு, சிங்காரா, ஆடர்வி போன்ற பகுதிகளில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்கள் அனைத்தும் தமிழக மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. மாவோயிஸ்டுகள் எளிதாக இந்த கிராமங்களுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்கேம்பை ஆதிவாசி கிராமத்துக்குள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் வந்தனர். பின்னர் அவர்கள் கிராமத்திலேயே தங்கி, சமையல் செய்து சாப்பிட்டு விட்டு அங்குள்ள மக்களிடம் உணவு பொருட்களை வாங்கி சென்றதுடன், அங்கு நோட்டீசையும் ஒட்டிச்சென்றனர்.
எனவே இந்த பகுதியில் மீண்டும் மாவோயிஸ்டுகள் ஊடுருவலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு இருந்து வந்தது. இதன் பேரில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா அறிவுரையின் பேரில் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் 15 பேர் கொண்ட அதிரடிப்படை போலீசார் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மானார் தூதூர்மட்டத்தில் இருந்து கொலக்கம்பை சிங்காரா எஸ்டேட் மற்றும் ஆடர்லி வழியாக ஆதிவாசி கிராமங்களிலும், அருகே உள்ள வனப்பகுதிகளிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

மேலும், புதிய ஆட்களின் நடமாட்டம் இருப்பின், உடனடியாக, போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆதிவாசி மக்களை போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story