திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை: மின்கம்பிகள் அறுந்து விழுந்தன


திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை: மின்கம்பிகள் அறுந்து விழுந்தன
x
தினத்தந்தி 13 Oct 2018 11:00 PM GMT (Updated: 13 Oct 2018 9:13 PM GMT)

திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

திருப்பூர்,

திருப்பூரில் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்தது. இதில் கட்டிடப்பணிக்காக ரோட்டோரம் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் சரிந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

திருப்பூர் மாநகரில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5.30 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. பலத்த காற்று வீசியதால் சாலையோரம் வைத்திருந்த விளம்பர பதாகைகள் சரிந்தன. திருப்பூர் ராயபுரம் விரிவு எல்.ஆர்.ஜி. லே-அவுட் 2-வது வீதியில் ரோட்டோரம் நின்ற வேப்ப மரம் வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. மேலும் மாநகரின் பல இடங்களில் மரங்கள் சரிந்தன. பல இடங்களில் மரக்கிளைகள் வீதிகளில் முறிந்து விழுந்தன.

திருப்பூர் பங்களா பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன்பு கட்டிடப்பணிகளுக்காக நடப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் காற்றில் அருகில் இருந்த மின்கம்பங்கள், மின்மாற்றி மீது சரிந்தன. இதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பிகளை சீரமைத்தனர். ரெயில் நிலையம் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லாததால் மழைநீர் தேங்கியது. குறிப்பாக பனியன் நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் மின்மோட்டார் மூலமாக பனியன் நிறுவனத்துக்கு முன்பு தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினார்கள்.

திருப்பூர் மங்கலம் ரோடு கோழிப்பண்ணை கிரீன் அவென்யூ பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் ரோட்டில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு தேங்கியது. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லாததால் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர். திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. பிரதான ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

ஆண்டிப்பாளையம் குளம் நிரம்பி இருப்பதால் குளத்துக்கு வரும் வெள்ளம் அருகே உள்ள மண் சாலையில் தேங்கியது. மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் உரிமையாளர்கள் சிரமம் அடைந்தனர்.





Next Story