இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2018 11:45 PM GMT (Updated: 21 Oct 2018 7:39 PM GMT)

இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளம்பெண்ணின் தாயார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 40). இவருடைய மனைவி பரமேஸ்வரி(38). சம்பவத்தன்று இவர்களுடைய 16 வயது மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத்குமார்(25) என்ற வாலிபர் கிண்டல் செய்தார்.

இது குறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின்பேரில் ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட், வினோத்குமாரை போலீஸ் நிலையம் வரவழைத்து கண்டித்து அனுப்பி வைத்து விட்டார்.

இதற்கிடையில் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு வந்த பிரேம்குமார், தனது மகளை கிண்டல் செய்தது குறித்து வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் பிரேம்குமாரை, வினோத்குமார் அடித்து உதைத்தார்.

இதுபற்றி அறிந்ததும் பாரிமுனை ரேவ் பகுதியில் உள்ள பிரேம்குமாரின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்து வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தனர். இதனால் மோதல் வெடித்தது. இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், வீட்டில் இருந்த கத்தியால் பிரேம்குமாரின் உறவினர்களை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மேரி(40) என்ற பெண் பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க முயன்ற மேரியின் தங்கை மெர்லின், பிரேம்குமார் இருவரும் படுகாயம் அடைந்து, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ராயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், அவருடைய தம்பி தமிழ்செல்வன்(24), உறவினர் சங்கர்(27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இளம்பெண்ணின் தாய் பரமேஸ்வரி அளித்த புகாரில் வினோத்குமார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மோதல் சம்பவமும், அநியாயமாக ஒரு அப்பாவி பெண் கொலை செய்யப்பட்டு இருக்க மாட்டார் என அந்த பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் மீது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் சரியாக செயல்படவில்லை என்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி விசாரணை நடத்தும்படி போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோரது மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பரமேஸ்வரி முதலில் புகார் அளித்தபோதே வினோத்குமார் மீது இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த பெண் கொலையை தடுத்து இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெண் கொலை சம்பவத்துக்கு முன்னதாக பிரேம்குமார் மற்றும் அவர்களது உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக, கைதான வினோத்குமாரின் மனைவி விஜயலட்சுமி(23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைதான 3 பேருடன் சேர்த்து அவரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story