ஆத்தூரில் மாணவியை வாலிபர் கொலை செய்தது ஏன்? - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


ஆத்தூரில் மாணவியை வாலிபர் கொலை செய்தது ஏன்? - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 23 Oct 2018 11:15 PM GMT (Updated: 23 Oct 2018 10:59 PM GMT)

ஆத்தூரில் மாணவியை வாலிபர் கொலை செய்தது ஏன்? என்று போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்குகாடு மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சாமிவேல். இவரது இளைய மகள் ராஜலட்சுமி (வயது 14). 8-ம் வகுப்பு படித்து வந்த அவரை நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் கார்த்திக் என்ற தினேஷ்குமார் (26) அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். பின்னர் மாணவியின் தலையை துண்டித்து ரோட்டில் வைத்துவிட்டு தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தினேஷ்குமார், ராஜலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்ததுள்ளார். அவர் பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் அவரது பின்னால் சென்று வந்ததும், அவரை அடைய முற்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜலட்சுமி தனது தந்தையிடம் தெரிவித்து விடுவேன் என்று தினேஷ்குமாரிடம் கூறியதால், அவர் ராஜலட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து தினேஷ்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், என்னை கொன்று விடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். மேலும் நான் வெளியில் சென்றால், இதுபோல் வேறு யாரையாவது கொலை செய்து விடுவேன். எனவே என்னை உயிருடன் விட்டு விடாதீர்கள். தயவு செய்து என்னை கொன்று விடுங்கள். என்னை ரெயில் தண்டவாளத்தில் படுக்க வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது மனநலம் பாதித்தவர் போல நடிக்கிறாரா? என விசாரணை நடத்தப்படுகிறது.

தினேஷ்குமாருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவியும், செல்வதரணிஷ் என்ற மகனும் உள்ளனர். மகனை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தினேஷ்குமார் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றதாகவும், உறவினர்கள் அவரை தடுத்ததாகவும், அவர் அடிக்கடி சைக்கோ போல் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவரது மனைவி சாரதாவிடம் விசாரணை நடத்திய போது, அவர் கூறியதாவது:- எனது கணவர் அடிக்கடி சைக்கோ போல நடந்து கொள்வார். திடீரென மரத்தை வெட்டுவார். எப்போதும் ஏதாவது முணு முணுத்துக்கொண்டே இருப்பார். தான் சுடுகாட்டில் படுத்து தூங்குவேன் என்று கூறுவார். கோபத்தில் ஆவேசமாக திட்டுவார். உறவினர்களை அடிப்பார். அடிக்கடி சாமியும் ஆடுவார்.

சம்பவத்தன்று ஒரு கிலோ கோழிக்கறி வாங்கி வந்து மது குடித்துவிட்டு முழு கோழிக் கறியையும் அவரே சாப்பிட்டார். போதை தலைக்கு ஏறியதும்தான் மாணவியின் வீட்டுக்கு சென்றார் என்று சாரதா கூறினார்.


Next Story