தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு வந்துள்ள பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை தியாகம் செய்யும் கிராம மக்கள்


தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு வந்துள்ள பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை தியாகம் செய்யும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 5 Nov 2018 9:45 PM GMT (Updated: 5 Nov 2018 7:18 PM GMT)

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ள பறவைகளுக்காக இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு வெடிப்பதை அப்பகுதி கிராம மக்கள் தியாகம் செய்துள்ளனர்.

ராமநாதபுரம்,


ராமநாதபுரம் அருகே நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்டது தேர்த்தங்கல் ஊராட்சி. இங்கு சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை இல்லாதபோதிலும் மற்ற சரணாலயங்களை விட தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு சற்று அதிகமாக பறவைகள் வந்தன. இதற்கு இந்த சரணாலயத்தில் பறவைகள் வந்து செல்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் தேவையான வசதிகளை வனத்துறையின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது வசதியாக இருந்துள்ளது.

இந்த பறவைகளை தேர்த்தங்கல் ஊராட்சி பகுதி மக்கள் தங்களின் செல்லப்பிள்ளைகளாக நினைத்து பாதுகாத்து அதற்கு சிறிதளவுகூட தொல்லை கொடுக்காமல் கட்டுப்பாட்டோடு இருந்து வருகின்றனர். பறவைகள் வரத்து அதிகரித்து வருவதற்கு இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பறவைகளின் ரீங்கார சத்தமே தங்களின் பட்டாசு சத்தம் என்று மனதால் மகிழ்ந்து இந்த பறவைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று இப்பகுதி கிராமமக்கள் பட்டாசு வெடிக்காமல் தியாகம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பெய்த மழை காரணமாகவும், தற்போது பருவமழை நன்றாக பெய்ய தொடங்கி உள்ளதாலும் ஏராளமான பறவைகள் தேர்த்தங்கல் சரணாலயத்தை நோக்கி வரத்தொடங்கி உள்ளன.

இதன்காரணமாக இந்த பறவைகளுக்காக இந்த ஆண்டு மீண்டும் தேர்த்தங்கல் சரணாலய பகுதி கிராம மக்கள் தங்களின் பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியை வழக்கம்போல் தியாகம் செய்துள்ளனர். பறவைகளின் வருகைக்காகவும், அதன் பாதுகாப்பிற்காகவும் இப்பகுதி மக்கள் தீபாவளி அன்று சிறுவர், சிறுமிகள் கூட பறவைகளின் அருமையையும், அதன் பாதுகாப்பையும் உணர்ந்து பட்டாசுகளை வெடிக்காமல் தியாகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கள் பகுதியை தேடி இனப்பெருக்கத்திற்காக நம்பிக்கையுடன் வரும் பறவைகளுக்கு பட்டாசு வெடி சத்தத்தினால் அச்ச உணர்வு ஏற்பட்டு பயத்தினால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் திரும்பி செல்லக்கூடாது என்பதற்காகவும், பறவைகள் முட்டைகள் அதிக வெடி சத்தத்தினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த தியாகத்தை செய்துவருவதாக தேர்த்தங்கல் கிராம மக்கள் மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீபத்திருநாளாம் தீபாவளியை தீபஒளி ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்ளதாக தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கு நேரம் ஒதுக்கி மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதித்துள்ள வேளையில் எந்த சட்டமும் பிறப்பிக்கபடாமல் பறவைகளை நேசிக்கும் கிராம மக்கள் அவைகளுக்காக தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்து பட்டாசு வெடிப்பதை தியாகம் செய்துள்ள சம்பவம் நெஞ்சை நெகிழ செய்கிறது.

Next Story