தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு: லாரியில் இருந்து பீறிட்டு வெளியேறிய டீசல் - தீயணைப்பு வீரர்களால் பெரும் விபத்து தவிர்ப்பு


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு: லாரியில் இருந்து பீறிட்டு வெளியேறிய டீசல் - தீயணைப்பு வீரர்களால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 9 Nov 2018 9:45 PM GMT (Updated: 9 Nov 2018 7:26 PM GMT)

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சென்று கொண்டு இருந்த லாரியில் டீசல் நிரப்பும் டேங்க் சேதம் அடைந்ததால் டீசல் பீறிட்டு வெளியேறி சாலையில் ஓடியது. தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தேனி,

மதுரையில் இருந்து தேனிக்கு உரம் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நேற்று வந்து கொண்டு இருந்தது. லாரியை மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சந்தோஷ் மகன் கார்த்தி ஓட்டி வந்தார். காலை 11.30 மணியளவில் இந்த லாரி தேனி கருவேல்நாயக்கன்பட்டியை கடந்து வந்து கொண்டு இருந்தது.

கலெக்டர் அலுவலகம் அருகில் வந்த போது, லாரியில் டீசல் நிரப்பும் டேங்க் (தொட்டி) அருகில் உள்ள இரும்பு கம்பி எதிர்பாராத விதமாக உடைந்தது. உடைந்த கம்பியின் ஒரு பாகம் தார்சாலையில் பட்டு மேல்நோக்கி எகிறியது.

அதே வேகத்தில் அந்த கம்பி டீசல் டேங்க் மீது பலமாக தாக்கியது. இதில் டீசல் டேங்க் சேதம் அடைந்து, ஓட்டை விழுந்தது.

இதனால், அதில் இருந்து டீசல் பீறிட்டு வெளியேறியது. இந்த டீசல் சாலையில் ஆறாக ஓடியது. உடனே லாரியை கலெக்டர் அலுவலகம் முன்பு டிரைவர் நிறுத்தினார். நல்லவேளையாக அந்த லாரியின் பின்னால், ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் நோக்கி தீயணைப்பு வாகனம் வந்து கொண்டு இருந்தது. தீயணைப்பு படைவீரர்கள் வாகனத்தை நிறுத்தி துரிதமாக செயல்பட்டு சாலையில் ஓடிய டீசலில் தீப்பற்றாமல் தடுக்கவும், லாரியின் என்ஜின் வெப்பத்தால் தீப்பற்றிக் கொள்ளாமல் தடுக்கவும் தண்ணீை- ர பீய்ச்சி அடித்த னர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து லாரி டிரைவர் கார்த்தியிடம் கேட்டபோது, ‘மதுரையில் இருந்து உரம் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு காலையில் புறப்பட்டு வந்தேன். சுமார் 16 டன் உரம் மூட்டைகள் லாரியில் உள்ளது. டீசல் டேங்க் சுமார் 320 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் சுமார் 300 லிட்டர் டீசல் இருந்தது. எதிர்பாராத சம்பவத்தால் அவை வீணாக சாலையில் ஓடிவிட்டது. அதிர்ஷ்டவசமாக தீயணைப்பு வாகனம் பின்னால் வந்ததால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது’ என்றார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story