நடத்தையில் சந்தேகம்: மனைவிக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது


நடத்தையில் சந்தேகம்: மனைவிக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 11 Nov 2018 10:00 PM GMT (Updated: 11 Nov 2018 6:31 PM GMT)

உத்தனப்பள்ளி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள டி.குருபரப்பள்ளியை சேர்ந்தவர் சோமசேகர். தொழிலாளி. இவருடைய மனைவி முனிரத்தினம் (வயது26). இவர் அடிக்கடி அதேபகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனால் மனைவியின் நடத்தையில் சோமசேகருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் முனிரத்தினம் கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமனார் வீட்டுக்கு சென்ற சோமசேகர் மனைவியிடம் தகராறு செய்து கத்தியால் கை, கழுத்து பகுதியில் குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சோமசேகரை கைது செய்தனர்.

Next Story