‘கஜா’ புயல் எதிரொலி: புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது


‘கஜா’ புயல் எதிரொலி: புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 11 Nov 2018 10:45 PM GMT (Updated: 11 Nov 2018 8:30 PM GMT)

கஜா புயல் எதிரொலியாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் வருகிற 15-ந் தேதி கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும், அந்த சமயத்தில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்று காலையில் தெரிவித்தது. மேலும் அன்றைய தினத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது எனவும், ஏற்கனவே ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் எனவும் அதிகாரிகள் நேற்று முன்தினம் அறிவித்தனர்.

மேலும் புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று முன்தினம் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் ‘கஜா’ புயல் நேற்று காலையில் சென்னைக்கு கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக நேற்று புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Next Story