கஜா புயலால் பாதிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிவிரைவாக நடைபெறும் சீரமைப்பு பணிகள் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


கஜா புயலால் பாதிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிவிரைவாக நடைபெறும் சீரமைப்பு பணிகள் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 22 Nov 2018 11:00 PM GMT (Updated: 22 Nov 2018 7:42 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் அதிவிரைவாக மேற்கொள்ளப்படுகிறது என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறும் இடங்களை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் தமிழகத்தில் 7 மாவட்டங்களை தாக்கியது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் வகையில், தமிழக அரசு அனைத்துத் துறை களையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இன்று(நேற்று) புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பன்காரசத்திரம், திருவப்பூர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கஜா புயல் மீட்புப் பணிகள் பார்வையிடப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் குறைகளும் கேட்டறிந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பணியாளர்கள் மூலம் சீரமைப்பு பணிகள் அதிவிரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பயனாக புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. மேலும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணரெட்டி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், ஈஸ்வரன் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story