ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 5:39 PM GMT)

ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாணாபுரம், 

வாணாபுரத்தை மையமாக கொண்டு 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வரும் நிலை உள்ளது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முறையான பராமரிப்பு இல்லாததால் ஏரிக்கு வரும் நீர்வரத்துகால்வாய் மற்றும் பாசனக்கால்வாய் தூர்ந்து போன நிலையில் உள்ளது. மேலும் கால்வாயில் முட்புதர்களும், செடிகளும் அடர்ந்து காணப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் வருவது இல்லை. ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாயையும், பாசனக்கால்வாயையும் சீரமைக்க கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் சாத்தனூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் பிப்ரவரி மாதங்களில் குடிநீருக்காகவும், விவசாயிகள் பாசன வசதி பெறுவதற்கும் 30-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அப்படி திறந்துவிடும் தண்ணீரானது ஏரிகளுக்கு முழுவதும் வந்து சேர்வதும் கிடையாது. அதற்கு பாசனக்கால்வாயில் புதர்மண்டி கிடப்பதே காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே, எதிர்வரும் காலங்களில் மழைநீர் ஏரிக்கு செல்லவும் சாத்தனூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் ஆனது ஏரிக்கு செல்லவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story