கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கக்கோரி மதுரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மறியல்; திருமாவளவன், சீமான் பங்கேற்பு


கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கக்கோரி மதுரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மறியல்; திருமாவளவன், சீமான் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Dec 2018 12:15 AM GMT (Updated: 8 Dec 2018 8:30 PM GMT)

கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கக்கோரி மதுரை ரிங்ரோட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தொல்.திருமாவளவன், சீமான் கலந்து கொண்டனர்.

மதுரை,

கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் தமிழக அரசை கண்டித்து வைகை கிருதுமால் நதி உரிமை மீட்பு குழு சார்பில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பில் விவசாயிகள் திரண்டு நேற்று போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

வைகை கிருதுமால் நதி உரிமை மீட்பு குழு செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் கண்டித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகள் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது கூறியதாவது:–

தண்ணீர் என்பது உலக உயிர்களின் உரிமை. ஒரு மாநிலத்தின் உரிமை அல்ல. இன்று நீர் ஒரு பெரிய வியாபார பொருளாக மாறி விட்டது. நதிகள் இல்லாவிட்டால் பூமி செயல் இழந்து விடும். ஆறுகள் செல்வம் கொழிக்கும் பொருளாக மாற்றப்பட்டு விட்டது. அதற்கு காரணம் மணல் கொள்ளை. ஆற்றில் மணல் இல்லாவிட்டால் ஆறு செத்துவிடும். நீர் நிலைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறிவிட்டன. இது தான் கிருதுமால் நதிக்கு ஏற்பட்டு உள்ளது.

மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் நீர் நிலைகளை மீட்கும் வழக்கை விசாரிக்கும் போது எதிர்தரப்பு வக்கீல் சொல்கிறார், இந்த நீதிமன்றம் அமைந்திருப்பதே ஏரியில்தான் என்று. அரசு கட்டிடங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் நீர் நிலைகளில்தான் கட்டப்பட்டுள்ளன. மிக்சி, கிரைன்டர் இலவசமாக தரும் அரசால் தண்ணீரை இலவசமாக தர முடியவில்லை. ஏன் என்றால் தண்ணீர் விற்பனை செய்யும் முதலாளிகளின் கமி‌ஷன் அரசியல்வாதிகளுக்கு செல்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும் போது கூறியதாவது:–

விவசாயிகள் இங்கே போராடி வருவது அதிகாரிகளை மட்டும் கண்டித்து அல்ல, ஆட்சியாளர்களை கண்டித்தும்தான். கிருதுமால் நதிக்கு நீர் வராததற்கு காரணம் வைகையில் நடைபெற்ற மணல் கொள்ளை.

வைகை நதி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. தாமிரபரணியில் ஒரளவு மணல் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குளிர்பான நிறுவனங்கள் அங்கு தண்ணீரை திருடி உறிஞ்சி விலைக்கு விற்று வருகிறார்கள்.

அய்யப்பன் கோவிலிலும், சென்னை கடற்கரையிலும் சுண்டல், முறுக்கு விற்கும் இளைஞர்கள் பெரும்பாலும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். ஏன் என்றால் ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்கான நீர்ப்பாசனம் துண்டிக்கப்பட்டு, விவசாயத்திற்கு நீர் இல்லாமல் மக்கள் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

வைகை கிருதுமால் நதி உரிமை மீட்பு குழு செயலாளர் ஜெயச்சந்திரன் பேசியதாவது:–

வைகை நதியையும் கிருதுமால் நதியையும் இணைக்கும் 1500 ஆண்டு அரிகேசரி ஒப்பந்தத்தை மறைக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து வைகை கிருதுமால் நதியை பாதுகாக்க கோரி வருகிற 12–ந் தேதி, மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட இருக்கிறோம். மேலும் 15–ந் தேதி முதல் மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைகை கிருதுமால் நதி பாசன விவசாய கிராம மக்கள் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளோம். அந்த போராட்டம் 15–ந் தேதி தொடங்கி தொடர்ச்சியாக 50 நாட்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story