எடப்பாடி அருகே, குடும்ப தகராறில்: கடப்பாரையால் அடித்து மனைவி கொலை - முதியவர் கைது


எடப்பாடி அருகே, குடும்ப தகராறில்: கடப்பாரையால் அடித்து மனைவி கொலை - முதியவர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2018 10:15 PM GMT (Updated: 13 Dec 2018 11:18 PM GMT)

எடப்பாடி அருகே குடும்ப தகராறில் கடப்பாரையால் மனைவியை அடித்து கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

எடப்பாடி, 

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வேம்பனேரியை சேர்ந்தவர் பெரமன் (வயது 72). இவருடைய மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

பெரமனும், லட்சுமியும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாகவும், அப்போது மகன்கள் வந்து பெற்றோரை சமாதானம் செய்து வைப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் நேற்று காலையிலும் பெரமனுக்கும், லட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பெரமன் வீட்டில் கிடந்த கடப்பாரையை எடுத்து லட்சுமி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் பெரமனை கைது செய்தனர்.

மனைவியை கணவரே கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story