சாத்தான்குளம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு


சாத்தான்குளம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு
x
தினத்தந்தி 22 Dec 2018 10:00 PM GMT (Updated: 22 Dec 2018 6:43 PM GMT)

சாத்தான்குளம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்.

சாத்தான்குளம், 

சாத்தான்குளம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்.

விவசாயி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சேர்ந்தவர் சத்தியநாதன் (வயது 85) விவசாயி. இவருடைய மனைவி கோயில்மணி (77). இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சத்தியநாதன் தனது தோட்டத்துக்கு செல்லும்போதும், வெளியில் எந்த இடங்களுக்கும் செல்லும்போதும் தன்னுடைய மனைவியை அழைத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சத்தியநாதனுக்கு முதுமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சத்தியநாதனை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

சாவிலும் இணை பிரியாத தம்பதி

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சத்தியநாதன் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் கோயில்மணி காலையில் இருந்து சாப்பிடாமல், அழுது கொண்டே இருந்தார். மாலையில் கணவரது உடலை அடக்கம் செய்வதற்காக, வீட்டில் இருந்து கல்லறை தோட்டத்துக்கு தூக்கி சென்றனர். அப்போது அதிர்ச்சியில் கோயில்மணி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதையடுத்து சத்தியநாதன், கோயில்மணி ஆகிய 2 பேரின் உடல்களையும் அருகருகே அடக்கம் செய்தனர். சாவிலும் இணை பிரியாத தம்பதிக்கு உறவினர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Next Story