பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை பெண் ஆய்வாளர் அறையில் ரூ.1 லட்சம் சிக்கியது


பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை பெண் ஆய்வாளர் அறையில் ரூ.1 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 10 Jan 2019 9:30 PM GMT (Updated: 10 Jan 2019 7:24 PM GMT)

பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், நகரமைப்பு பெண் ஆய்வாளர் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதியில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் பல்லாவரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதிகளில் அதிக அளவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் அனுமதி தரப்படும் என நகரமைப்பு அதிகாரிகள் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்தநிலையில் நேற்று மாலை டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் சென்னை பெருநகர லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் முதல் தளத்தில் உள்ள நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் அவர்கள் திடீர் சோதனை நடத்தினர். அங்கிருந்தவர்களை வெளியில் விடா மலும், வெளிநபர்கள் யாரையும் உள்ளே விடாமலும் சுமார் 5 மணி நேரம் இந்த சோதனையை நடத்தினர்.

ரூ.1 லட்சம் சிக்கியது

அதில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஜெயந்தி அறையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதற்கு நகரமைப்பு ஆய்வாளர் ஜெயந்தி, ‘அந்த பணம் எப்படி என் அறைக்கு வந்தது?’ என தெரியவில்லை என்று தெரிவித்ததாகவும், இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இரவு 9.15 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story