கடம்பூர் அருகே பயங்கரம்: விவசாயி வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கடம்பூர் அருகே பயங்கரம்: விவசாயி வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Feb 2019 10:15 PM GMT (Updated: 4 Feb 2019 7:19 PM GMT)

கடம்பூர் அருகே வீடு புகுந்து விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள மேல பாறைப்பட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 60) விவசாயி. இவருடைய மனைவி ஆனந்தம் அம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன், அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு 9 மணி அளவில் அண்ணாத்துரை தனது வீட்டில் கட்டிலில் படுத்து கிடந்தார். ஆனந்தம் அம்மாள், அருகில் உள்ள மாட்டு தொழுவத்துக்கு சென்று இருந்தார்.

அப்போது அண்ணாத்துரையின் வீட்டுக்குள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணாத்துரையை சரமாரியாக வெட்டினர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட அண்ணாத்துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அண்ணாத்துரையின் மகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் அவர் மனைவியிடம் விவாகரத்து பெற்று, அமெரிக்காவில் தனியாக வசித்து வருகிறார். எனவே குடும்ப தகராறு காரணமாக அண்ணாத்துரை கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடம்பூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story