தீக்காயம் அடைந்த பெண்களிடம் வாக்குமூலம் வாங்குவது எப்படி? போலீசாருக்கு, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆலோசனை


தீக்காயம் அடைந்த பெண்களிடம் வாக்குமூலம் வாங்குவது எப்படி? போலீசாருக்கு, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆலோசனை
x
தினத்தந்தி 5 Feb 2019 11:00 PM GMT (Updated: 5 Feb 2019 7:03 PM GMT)

தஞ்சையில் நடந்த போலீசாருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி, தீக்காயம் அடைந்த பெண்களிடம் வாக்குமூலம் வாங்குவது எப்படி? என்று ஆலோசனை வழங்கினார்.

தஞ்சாவூர்,

உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் படி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது மற்றும் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் வரவேற்றார். தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சின்னப்பன் கலந்து கொண்டு, ஒரு இடத்தில் சம்பவம் நடந்தவுடன் அது குறித்து போலீசார் எவ்வாறு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது. குற்றவாளிகளிடம் உண்மை தன்மையை பெற எந்தவகையில் விசாரணை நடத்துவது. எந்த, எந்த குற்றங்களுக்கு எந்த பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளித்தார்.

இதன்பின்னர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, தான் அளித்த பயிற்சியை அடிப்படையாக கொண்டு போலீசார்களிடம் கேள்விகள் கேட்டார். இதற்கு தவறான பதில் அளித்த போலீசார்களிடம் ஓய்வுபெற்ற நீதிபதி கடுமையாக பேசியதுடன், சட்டவிதிகளை முறையாக படிக்க வேண்டும் என்று கூறினார்.

கொலை வழக்கு மற்றும் தீக்காயம் அடைந்த பெண்கள் ஆகியோரிடம் எவ்வாறு வாக்கு மூலம் வாங்குவது என்பது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி எடுத்து கூறினார். இறுதியாக பயிற்சி தொடர்பான கேள்விகள் தயார் செய்யப்பட்டு போலீசாருக்கு தேர்வுகள் வைக்கப்பட்டது. இதில் அதிகமதிப்பெண் பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story