சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை  உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 6 Feb 2019 10:00 PM GMT (Updated: 6 Feb 2019 12:07 PM GMT)

சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

புதுப்பெண் தற்கொலை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சூரங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பாண்டியாபுரம் பகுதியை சேர்ந்த சிவன் மகள் பானுமதி (வயது 21) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. முத்துக்குமார் பெங்களுரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பானுமதி சூரங்குடியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் பானுமதி மயக்கநிலையில் கிடந்துள்ளார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பானுமதியின் அண்ணன் கனிராஜ்க்கு தகவல் அளித்தனர். அவர் ஓட்டப்பிடாரத்தில் இருந்து விரைந்து சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு வந்தபோது பானுமதி இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

போலீசில்புகார்

இதுகுறித்து கனிராஜ் தனது தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாக சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பானுமதிக்கு திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆவதால், இச்சம்பவம் குறித்து உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். அதனை தொடர்ந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பானுமதியின் உடலை வாங்க வந்த உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story