குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் பறிமுதல்; அதிகாரியிடம் விசாரணை


குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் பறிமுதல்; அதிகாரியிடம் விசாரணை
x
தினத்தந்தி 16 Feb 2019 11:15 PM GMT (Updated: 16 Feb 2019 9:01 PM GMT)

குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதிகாரியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3½ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் மாடசாமி சுந்தர்ராஜ் (வயது 48). இவர் அரசு பணிகளை டெண்டர் விடுவது சம்பந்தமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி புகார் சென்றது.

இதனையடுத்து நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்தனர். இந்தநிலையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் போலீசாரும், தோவாளை தாசில்தார் திருவாழி ஆகியோர் குமரி கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் மறைந்திருந்தனர்.

இரவு 9 மணிக்கு மாடசாமி சுந்தர்ராஜ் கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு காரில் வந்தார். இதனை கவனித்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர் வந்த காரை சோதனை செய்தனர். இதில், காரின் பின் இருக்கையில் ரூ.3 லட்சத்து 52 ஆயிரமும், மாடசாமி சுந்தர்ராஜின் சட்டைப்பையில் ரூ.18 ஆயிரமும் இருந்தது. இந்த பணம் பற்றி அவரிடம் போலீசார் கேட்ட போது, அவர் முறையான பதில் எதுவும் சொல்லவில்லை. மேலும் அதற்குரிய ஆவணத்தையும் காட்டவில்லை.

இதனையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் தொடர்பாக மாடசாமி சுந்தர்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மாடசாமி சுந்தர்ராஜின் சொந்த ஊர் நெல்லை வண்ணாரப்பேட்டை.

குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதிகாரியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story