ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார்சைக்கிள் திருட்டு


ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார்சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 8:42 PM GMT)

ஈரோட்டில் பட்டப்பகலில் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

ஈரோடு,

ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 36). இவர் காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவராக உள்ளார்.

இவர் நேற்று காலை ஈரோடு பஸ் நிலையம் அருகில் நாச்சியப்பா வீதியில் உள்ள அவருடைய அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதன்பின்னர் வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோவை பார்த்தார். அப்போது 3 வாலிபர்கள் அங்கு வந்ததும், அதில் ஒரு வாலிபர் கள்ளச்சாவியை போட்டு ராஜேஷ்கண்ணாவின் மோட்டார் சைக்கிளை திருட முயன்றதும், அந்த சாவி சேராததால் மற்றொரு வாலிபர் கொடுத்த சாவியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளின் பூட்டை திறந்ததும், பின்னர் 3 வாலிபர்களும் அதே மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து ராஜேஷ்கண்ணா கொடுத்த புகாரின் பேரில், ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார்சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story