வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:45 PM GMT (Updated: 23 Feb 2019 11:43 PM GMT)

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வரகனூரில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நீதிராஜ், கிருஷ்ணம்மாள், மாரியம்மாள், கஸ்தூரி ஆகிய 4 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வெடி விபத்தில் இறந்த நீதிராஜ், கிருஷ்ணம்மாள், மாரியம்மாள், கஸ்தூரி ஆகிய 4 பேரின் உடல்களும் நேற்று காலையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில், தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இறுதிச்சடங்கு நடத்துவதற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் அனைத்து கட்சியினர், இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் (நெல்லை புறநகர்), ஆர்.எஸ்.ரமேஷ் (தூத்துக்குடி வடக்கு), நகர செயலாளர் பால்ராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சரவணன், தி.மு.க. நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், ஒன்றிய செயலாளர் முருகேசன், அ.தி.மு.க. குருவிகுளம் ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அமல்ராஜ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், உமாசங்கர், வக்கீல் பால்ராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பாண்டி, நகர செயலாளர் முருகன் உள்பட பலர் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேந்திரன் (சங்கரன்கோவில்), ஜெபராஜ் (கோவில்பட்டி), போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தாசில்தார் பரமசிவன் மற்றும் அதிகாரிகள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

தொடர்ந்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஆலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆலை நிர்வாகம் சார்பில், வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், ஈமச்சடங்கு நிதியாக தலா ரூ.25 ஆயிரமும் வழங்க முன்வந்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

மாலையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா மற்றும் அதிகாரிகள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார். இதையடுத்து இறந்தவர்களின் உடல்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வாகனங்களில் உடல்களை ஏற்றி, சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.

Next Story