திருச்சி பொன்மலை பணிமனையில் ஊட்டி மலை ரெயிலுக்கு நிலக்கரி என்ஜின் தயாரிப்பு


திருச்சி பொன்மலை பணிமனையில் ஊட்டி மலை ரெயிலுக்கு நிலக்கரி என்ஜின் தயாரிப்பு
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 13 March 2019 7:49 PM GMT)

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊட்டி மலை ரெயிலுக்கு நிலக்கரி என்ஜின் தயாரிக்கும் பணியை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தொடங்கி வைத்தார்.

திருச்சி,

தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷ் ரேஸ்தா திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிமனையில் என்ஜின் பராமரிப்பு, பெட்டிகள் தயாரிப்பு, புனரமைப்பு உள்ளிட்ட பிரிவுகளுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்ட டீசல் என்ஜினை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

ஊட்டி மலை ரெயிலுக்கு பொன்மலையில் 2 பெட்டிகள் புதுவிதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பெட்டிகளின் உள் மற்றும் வெளிப்புறம் பசுமை நிறத்திலும், இயற்கை எழில் காட்சிகளும், காட்டில் விலங்குகள் உலா வருவது போல ஓவியங்களும் பெட்டிகளின் வெளிப்புறத்தில் வரையப்பட்டுள்ளன. இதனை பொதுமேலாளர் குல்ஷ் ரேஸ்தா பார்வையிட்டார். பெட்டிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக அவர் பாராட்டினார்.

புதிய பெட்டிகளை ஓரிரு நாட்களில் ஊட்டிக்கு அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார். மேலும் மலை ரெயிலுக்கு புதிய பெட்டிகளை தயாரித்த ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார். ஊட்டி மலை ரெயிலுக்கு நிலக்கரியில் இயங்க கூடிய என்ஜின் புதிதாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும் என்ஜின் மாதிரியை அவர் பார்வையிட்டார். புதிதாக தயாரிக்கப்பட உள்ள நிலக்கரி என்ஜின் குறித்து ரெயில்வே ஊழியர்கள் விளக்கி கூறினர். புதிய என்ஜின் வடிவமைப்பு பிரிவு ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பொதுமேலாளர் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் சி.என். ஜா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர். இதைதொடர்ந்து திருச்சி ஜங்ஷனில் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். 

Next Story