இந்திய மாணவர் சங்க நிர்வாகியை தாக்கியதை கண்டித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களால் பரபரப்பு


இந்திய மாணவர் சங்க நிர்வாகியை தாக்கியதை கண்டித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 March 2019 11:00 PM GMT (Updated: 16 March 2019 7:24 PM GMT)

இந்திய மாணவர் சங்க நிர்வாகியை தாக்கியதை கண்டித்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களால் பர பரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகள் நேற்று முன்தினம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது இந்திய மாணவர் சங்க நிர்வாகியை, போலீஸ் உயர் அதிகாரி தாக்கினார். இதையடுத்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்தை கண்டித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இந்திய மாணவர் சங்கத்தினர், மாதர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் மற்றும் போலீசார் ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் நிர்வாகிகள் 5 பேரை மட்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்து செல்வதாக தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று பழைய பஸ் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story