குன்னூர் ஏல மையத்தில், ரூ.8½ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை


குன்னூர் ஏல மையத்தில், ரூ.8½ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை
x
தினத்தந்தி 17 March 2019 10:15 PM GMT (Updated: 17 March 2019 11:57 PM GMT)

குன்னூர் ஏல மையத்தில் ரூ.8½ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது.

குன்னூர்,

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தேயிலை விவசாயத்தை ஏராளமான விவசாயிகள் மேற்கொண்டு உள்ளனர். விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக நீலகிரி மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் செயல்படும் ஏல மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடக்கிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர். இந்த ஏலத்தில் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடைபெறுகிறது.

அதன்படி கடந்த 14, 15-ந் தேதிகளில் நடைபெற்ற ஏலத்துக்கு 9 லட்சத்து 53 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 6 லட்சத்து 38 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 3 லட்சத்து 15 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. முடிவில் 8 லட்சத்து 28 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இதன் மதிப்பு ரூ.8 கோடியே 51 லட்சம். இது 88 சதவீத விற்பனை ஆகும். சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.283, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.297 என விற்பனையானது.

சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.88 முதல் ரூ.92 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.130 முதல் ரூ.145 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.88 முதல் ரூ.97 வரையும், உயர் வகை ரூ.130 முதல் ரூ.150 வரையும் இருந்தது. இந்த ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட ரூ.1 விலை உயர்வு இருந்தது. அடுத்த ஏலம் வருகிற 21, 22-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 9 லட்சத்து 18 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது. 

Next Story