டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 7:49 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மேற்பார்வையாளர் முருகன் (வயது 38), உதவி விற்பனையாளர் புஷ்பராஜன் ஆகியோர் பணியில் இருந்தனர். இவர்கள் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, பாதுகாப்பு கருதி விற்பனை பணத்தை வீட்டுக்கு எடுத்து செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு விற்பனை பணம் ரூ.5 லட்சத்து 33 ஆயிரத்துடன் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் வீட்டுக்கு புறப்பட்ட னர்.

பணத்தை மேற்பார்வையாளர் முருகன் தனது வாகனத்தில் வைத்திருந்தார்.

அவர்கள் குமாரபுரம் சாலையில் ஒரு பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென முருகனை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதைபார்த்த புஷ்பராஜன் போலீசாருக்கு தகவல் கொடுப்பதற்காக போலீஸ் நிலையம் நோக்கி விரைந்து சென்றார்.

அதற்குள் அந்த மர்ம நபர்கள் முருகனை சரமாரியாக வெட்டிவிட்டு, பையில் இருந்த ரூ.5 லட்சத்து 33 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த முருகனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story