வெயிலின் தாக்கம் அதிகம், கடுமையான பணிகளை செய்ய வேண்டாம், கலெக்டர் அறிவுறுத்தல்


வெயிலின் தாக்கம் அதிகம், கடுமையான பணிகளை செய்ய வேண்டாம், கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 8:58 PM GMT)

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்ய வேண்டாம் என கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல்,

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு, கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

கோடை வெயிலின் வெப்ப கதிர்வீச்சு மனிதனுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புளை ஏற்படுத்த கூடும். தற்போது கோடைகாலம் தொடங்கி விட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் வெயில் மற்றும் வெப்ப கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இந்த காலத்தில் பருத்தியால் தயாரிக்கப்பட்ட, எடை குறைவான, தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகளை உடுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது தலைக்கு தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான குளிர் கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பயணங்களின் போது குடிநீர் எடுத்து செல்ல வேண்டும்.

உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கலவை ஆகியவற்றை குடிக்க வேண்டும்.

கால்நடைகளை நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும், அவற்றிற்கு தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும். வெயில் பாதிப்பினால் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மற்றவர் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். வெயில் நேரத்தில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். வெயிலில் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் செல்லவிடக் கூடாது.

கடும் வெயிலில் குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வெளியில் செல்லக்கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடுமையான பணிகளை செய்யக் கூடாது. உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story