மறுகூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு இனி மறு மதிப்பீடு கிடையாது புதுச்சேரி பல்கலைக்கழகம் தகவல்


மறுகூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு இனி மறு மதிப்பீடு கிடையாது புதுச்சேரி பல்கலைக்கழகம் தகவல்
x
தினத்தந்தி 22 March 2019 10:45 PM GMT (Updated: 22 March 2019 9:45 PM GMT)

எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு மறுமதிப்பீடு கிடையாது. மறுகூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று புதுவை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் (பொறுப்பு) சித்ரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எம்.பி.பி.எஸ். மாணவர்களின் நலன், எதிர்காலத்தை கருத்தில்கொண்டும், மதிப்பெண் தொடர்பாகவும், தோல்வியுற்ற பாடங்களை மீண்டும் எழுத கால நீட்டிப்புக்கோரி விண்ணப்பிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக பல்கலைக்கழக கல்விக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்ற மாணவர்கள் தோல்வியுற்ற பாடங்களை மீண்டும் எழுதி முடிப்பதற்கு கூடுதல் வாய்ப்பை வழங்க துணைவேந்தர் குர்மீத்சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ். படித்துவரும் மாணவர்கள் எழுத்து தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியுற்று ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்திருந்தால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தன. இனி வருகின்ற காலங்களில் முதல் முறையாக தோல்வியுற்ற மாணவர்களாக இருந்தாலும் அல்லது அடுத்தடுத்து தோல்வியுற்ற மாணவர்களாக இருந்தாலும் ஒரு பாடத்தில் மட்டும் கூடுதலாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் வகையில் துணைவேந்தர் குர்மீத் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார். புதுவை பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்படி எம்.பி.பி.எஸ். மாணவர்கள் முதலாம் ஆண்டை 4 முயற்சிகளிலேயே முடிக்கவேண்டும்.

4 முயற்சிகளும் படிப்பில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும். படிப்பில் சேர்ந்த ஆண்டிலிருந்து 8 ஆண்டிற்குள் முடித்தாக வேண்டும். பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்படி முதல்கட்ட தேர்வை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத மாணவர்கள் மற்றும் 8 ஆண்டு காலத்திற்குள்ளாக எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்காத மாணவர்கள் ஒரு தாளிற்கு தேர்வு கட்டண தொகையாக ரூ.25 ஆயிரத்தை செலுத்தி தேர்வை மீண்டும் எழுதுவதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் வருகிற மே மாதம் தொடங்கி அனைத்து மாணவர்களுக்கும் (பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்திற்கு கீழ் வருபவர்கள்) பல்கலைக்கழகத்தின் எழுத்து தேர்வானது இரட்டை மதிப்பீட்டிற்கு உட்பட்டது. மறு மதிப்பீடு என்பது இனி இல்லை. வருங்காலத்தில் மாணவர்கள் மறுகூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

எம்.பி.பி.எஸ். தொடர்பான அனைத்து மாற்றங்களும் வருகிற மே மாத அமர்விலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது. புதுவை பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்ந்து பயின்று வருகிற மாணவர்கள் அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story